
ஓட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நேரமில்லாத காரணத்தால் யாழ்.மாவட்டத்திலுள்ள பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியவில்லையென்று யாழ்.அரச அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்திருக்கின்றார். இதனால் யாழ்.மாவட்டத்திலுள்ள சுமார் 1500 வரையான பட்டடதாரிப் பயிலுநர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாடு பூராகவுமுள்ள 42000 வரையான பட்டதாரிகளுக்கு கடந்து ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பட்டதாரிப் பயிலுநர் நியமனம் வழங்கப்பட்டது. இதுவரை அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமையால் ஒன்றரை வருடங்களாக அவர்களுக்கு மாதாந்தம் 10000 ரூபாவே வேதனமாகக் கிடைக்கின்றது.
இந்த நிலையில், ஏனைய மாவட்டங்களில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நேரமில்லையென்று அரச அதிபர் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால், உண்மை அதுவல்ல என்று பட்டதாரிப் பயிலுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக ஈ.பி.டி.யின் கொலை வெறித் தாக்குதல்கள் அம்பலமாகி வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான கமலேந்திரன் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுமக்கள் முன்பு தனது முகத்தைக் காட்டுவதற்கு அஞ்சுகின்றார்.
இந்தக் காரணங்களாலேயே பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்குவது பின்தள்ளப்படுகின்றது. ஓட்டுக்குழு அமைச்சர் எப்போது வெளியே வருகின்றாரோ அப்போது தான் தங்களுக்கு நியமனம் என்றால் அதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பட்டதாரிப் பயிலுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவில் அனைத்தும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை வருடங்களாக நிரந்தர நியமனம் இன்றி வருகின்ற பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கலும் அரசியலாக்கப்படுகின்றமை குறித்து பட்டதாரிப் பயிலுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment