மராட்டிய மாநிலத்தில் கடும் வறட்சி நிலவும் சூழலில் அங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்துவது அவசியமா என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மக்கள் முக்கியமா அல்லது ஐபிஎல் கிரிக்கெட் முக்கியமா என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் கடும் வறட்சி நிலவிவரும் சூழலில், ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களில் ஆடுகளங்களை பராமரிக்க பெருமளவான தண்ணீர் பயன்படுத்தப்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் எனக் கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
தன்னார்வ அமைப்பான லோக்சத்தா இயக்கம் கிரிக்கெட் மைதான ஆடுகளங்களை தயார்படுத்துவதற்கு தண்ணீர் செலவு செய்யப்படுவதை தடுக்க வேண்டும் எனக் கோரி இந்தப் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், கோடிக்கணக்கான மக்கள் வறட்சியின் தவிக்கும்போது, ஐபிஎல் போட்டிகளை நடத்தும் ஆடுகளங்களுக்கு தண்ணீர் அளிப்பது அவசியமா எனக் கேள்வி எழுப்பியது.
தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டால் மட்டுமே இதன் தாக்கத்தை கிரிக்கெட் அமைப்புகள் புரிந்துகொள்ளும் என நீதிபதிகள் சாடியுள்ளனர்.ஐபிஎல் போட்டிகளை தண்ணீர் பஞ்சமில்லாத வேறு மாநிலங்களுக்கு மாற்றுவதே உசிதமானது என நீதிபதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் மட்டும் ஐபிஎல் போட்டி காலத்தில் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படவுள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
வறட்சி காலத்தில், இது மிகப் பெரிய அளவு என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஐபிஎல் போட்டிகள் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த விஷயத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டை வியாழக்கிழமை தெரியப்படுத்துமாறும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment