Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, January 6, 2014
தமிழக - தமிழீழ மீனவர்களை மோதவிடும் சிங்களம்
அன்று, கடற்புலிகளின் பலத்தில் இருந்த கடற்பாதுகாப்பும்
இன்று, தமிழக - தமிழீழ மீனவர்களை மோதவிடும் சிங்களமும்
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இன்றும் அதே இந்தியாவைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் ஜனநாயக வழிப் போராட்டங்களையும் நசுக்குவதற்கு முற்பட்டு வருகின்றது. ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டது போன்று ஜனநாயக வழிப் போராட்டங்களை அடக்குவதற்கு தமிழக அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளத் துடிக்கின்றது. அதன் ஒரு அங்கமே தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்களின் கைது விவகாரமாகும்.
ஆழ்கடலில் தேடிச் சென்று தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்துகொண்டு வருகின்ற சிறீலங்காப் படையினர், அவர்கள் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு இடைஞசலாக இருந்தார்கள் என்றும் ஈழத் தமிழ் மக்களின் கடற்றொழில் உபகரணங்களைச் சேதப்படுத்தினார்கள் என்று ஈழத் தமிழ் மீனவர்கள் தெரிவித்ததன் அடிப்படையிலேயே கைது செய்வதாகத் தமிழக மீனவர்களுக்கு கூறுகின்றனர். சிறீலங்காவின் நீதிமன்றங்களிலும் இவ்வாறே அறிக்கையிடுகின்றனர். இதனால் தமிழக மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் ஈழத் தமிழ் மக்களில் எதிர்ப்புணர்வைக் கையாள்வார்கள் என்றும் சிங்களப் படையினர் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான எதிர்ப்புணர்வுகளானவை தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு சார்பாக இடம்பெறுகின்ற போராட்டங்களின் வீச்சைக் குறைக்கும் என்று மகிந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
உலகிலுள்ள அனைத்து நாட்டு படைகளுடனும் ஒப்பிடுகையில் கடலில் கொலை செய்வதற்கு சிறந்த படை சிங்களப் படை என்பது தமிழர்கள் அறிந்த வராலாற்று உண்மை. இது தமிழக மக்களுக்கும் நன்கு தெரியும். அதே பாணியிலேயே சிறீலங்கா கடற்படையினர் மகிந்தவின் உத்தரவின் பேரில் இன்று தமிழக மீனவர்களைத் துரத்திப் பிடிக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் வாய் திறக்கக்கூடாது. மீறித் திறந்தால் எமது கடலில் நீங்கள் மீன் பிடிக்க முடியாது என்ற உண்மையை உணர்த்துவதற்காகவே சிங்களப் படையினர் தமிழக மீனவர்களைக் குறி வைத்திருக்கின்றனர்.
சிறீலங்கா- இந்திய மீனவர்களின் பிரச்சினை நேற்று இன்று உருவானதல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் எப்போது ஆரம்பமானதோ அப்போதே இந்த மீனவர் பிரச்சினையும் ஆரம்பமாகிவிட்டது. விடுதலைப் புலிகளின் கடற்புலிகளைத் தேடியழித்தல் என்ற பெயரில் சர்வதேச கடற்பரப்பில் வலம் வந்த சிறீலங்கா கடற்படையினரின் விசைப்படகுகள் தமிழக மீனவர்களில் பல நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்தன. இந்தக் காலகட்டத்திலேயே தமிழ் மக்களும் கடலில் கொன்று குவிக்கப்பட்டனர்.
சிறீலங்காவின் ஏனைய இடங்களுக்கும் யாழ்ப்பாணத்திற்குமான தரைவழிப்பாதை தடைப்பட்டதால் பல்வேறு தேவைகளுக்காகவும் தென்னிலங்கை செல்கின்ற பொது மக்கள் கடல் மார்க்கமாகவே போக்குவரத்துச் செய்தனர். குறிப்பாக, கிளாலி, கொம்படி கடற்பாதைகளே இதற்கென பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இதன்போது சிறீலங்கா கடற்படையினர் கடலில் ஆடிய வெறியாட்டத்தில் எமது பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கடலுக்கு இரையாகினர். அவ்வப்போது கரை திரும்புகின்ற கப்பல்கள் இரத்த வெள்ளத்தில் பிணங்களைச் சுமந்து வந்தன. இதனால் எமது தாயகமே அடிக்கடி சோகமயமானது. இந்தக் காலகட்டத்திலேயே தீவகக் கடற்பரப்பில் குமுதினிப் படுகொலையும் இடம்பெற்றது. நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்கும் இடையே சேவையில் ஈடுபட்ட குமுதினிப் படகில் பயணித்த மக்கள் சிறீலங்காக் கடற்படையினரால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலைகளை விட கடற்தொழிலுக்குச் சென்ற தமிழர் தாயகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் கடலில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். சிறீலங்கா அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மீனவர்கள் மிகுந்த கஸ்டப்பட்டு ஆயிரம் ரூபாவுக்கு ஒரு போத்தல் மண்ணெண்ணெய் வாங்கி தமது இயந்திரங்களை இயக்கிக்கொண்டு கடலுக்குச் சென்ற போதும் மறுநாள் பிணமாக வீட்டுக்கு திரும்புவார்கள். இதனை எந்த மனைவிமாரால் ஏற்றுக்கொள்ள முடியும். எந்த பிள்ளைகளால் இந்த துயரங்களைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், எமது தமிழ்க் கடல்தொழிலாளியின் மனைவிமார் இந்தத் துயரங்களைத் தாங்கினார்கள். எமது தமிழ்ப் பிள்ளைகள் இந்த வேதனைகளைச் சுமந்தனர். ஒரு நாள் இரு நாள் அல்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் இவ்வாறு வேதனைகள் தொடர்ந்தன.
இத்தனை அவலங்களையும் தமிழர்கள் தாங்கியபோது எவருமே திரும்பிப் பார்க்கவில்லை. இந்த வேதனைகளைத் தொடரவிடக்கூடாது என்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் எடுத்த முடிவால் தான் கடற்புலிகள் என்ற அணி உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் கிளாலி மற்றும் கொம்படி ஊடான போக்குவரத்தின் போதும் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளின் போதும் கடற்புலிகள் பாதுகாப்பு வழங்கினர். இதனால் சிங்களக் கடற்படை தமிழ் மக்களின் கடற்பரப்பில் கால்பதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மீறி தமிழ் மக்களின் கடற்பரப்புக்கு வந்த கடற்படையினரின் டோறாக்களும் விசைப்படகுகளும் அடிக்கடி கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் நிர்மூலமாக்கப்பட்டன.
உலகமே வியக்கும் வகையில் கடலில் சாதனைகளை நிகழ்திய கடற்புலிகள் தமிழ் மக்களின் தேசிய இராணுவத்தில் என்றுமே பிரிக்கப்பட முடியாத அங்கமாக வளர்ந்தது. தமிழீழ தேசியத் தலைவரை உலகில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்திக் காட்டுவதற்கு கடற்புலிகளின் வளர்ச்சியும் கடற்கரும்புலிகளின் வளர்ச்சியும் முக்கிய காரணமாக அமைந்தன. இன்றுவரை தமிழ் மக்களின் வீரம் உலகில் பேசப்படுகின்றது என்றால் அதற்கு காரணம் கடற்புலிகள் கடலில் நிகழ்த்தி வீர சாதனைகள் தான். குறிப்பாக சொல்லப்போனால், சோழர்களின் ஆட்சிக்கு பின்னர் உலகில் தமிழர்களின் ஆட்சி மலர்ந்தது என்றால் அது பிரபாகரன் தலைமையிலான ஆட்சிதான். சோழர்களுக்கு பின்னர் கடலில் புலிக்கொடியுடன் வலம் வந்த கப்பல்கள் என்றால் அது கடற்புலிகளின் கப்பல்கள்தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
புலிகள் பலமாக இருந்த போது பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்த சிறீலங்காக் கடற்படையினர் இன்று தமிழ் மக்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்களையும் அடக்குவதற்காக இந்திய மீனவர்களைப் பிடிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கட்டுரையாளராகிய நான் இன்று தாயகத்திலேயே வசிக்கின்றேன். இங்குள்ள மீனவர்களுடன் உரையாடினால் மட்டுமே உண்மை புரியும். அதுவும் சிலர் மட்டுமே உண்மையை உரைக்கத் தயாராக இருக்கின்றனர். குறிப்பாக இந்திய மீனவர்கள் என்ற பெயரில் திட்டமிட்டு கடலில் இறக்கப்படுகின்ற சிங்கள மீனவர்கள் எமது வலைகளை அறுத்தெறிகின்றனர். எமது வலைகளை நாங்கள் கரையில் படுத்திருந்தாலும் அங்கு வரை வந்து வலைகளை வெட்டிவிட்டுச் செல்கின்றனர். ஆனால் பழி தமிழக மீனவர்கள் பக்கம் செல்கின்றது என்று எமது தாயகத்திலுள் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
எமது மீனவர்கள் கூறுவது போன்று தாயகத்திலுள்ள மீனவர்கள் யுத்தத்தால் கடும் பாதிப்பை எதிர்நோக்கியவர்கள் என்பது தமிழக மீனவர்களுக்கு தெரியும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் அங்கே இந்தியாவில் தமிழக மீனவர்களே முன்னின்று குரல்கொடுக்கின்றனர். எங்களில் அக்கறையாக இருக்கின்ற அவர்கள் எமது வலைகளை அறுத்து எறிவார்கள் என்று நாங்கள் கனவுகூடக் காணவில்லை. ஆனால், அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே முறுகலை ஏற்படுத்திவிட்டு தாங்கள் அரசியல் குளிர் காய்வதற்கு சிங்கள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று யாழ்.குடாநாட்டு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்ப்பது போன்று கடந்த 29 ஆம் திகதி பிடிபட்ட மீனவர்கள் தாங்கள் தமது கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது விசைப்படகில் வந்த சிறீலங்கா கடற்படையினர் தங்களைத் துரத்திப் பிடித்தனர் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். கடந்த 29 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துப் பிடிக்கப்பட்டதாக தெரிவித்து 22 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் மகேந்திரராஜா முன்னிலையில் முன்நிறுத்தியபோது அவர்களை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருக்கின்றார். இதில் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் இந்த மீனவர்களில் ஒருவர் ஏற்கனவே சிறீலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறிலங்காவில் சிறைவைக்கப்பட்டிருந்து அண்மையில் தான் விடுவிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே பிடிபட்ட மீனவர்கள் திரும்பத் திரும்ப சிறீலங்காக் கடற்பரப்பிற்குள் வரமாட்டார்கள். ஆனால், தாங்கள் தமது கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது விசைப்படகில் வந்த சிறீலங்கா கடற்படையினர் தங்களைத் துரத்திப் பிடித்தனர் என்று கூறுகின்றனர். இதுதான் உண்மையானது. ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியாவின் தமிழகத்தில் இருக்கின் செல்வாக்கைக் குறைப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் இவ்வாறான விடயங்களை மேற்கொண்டு வருகின்றது.
எனவே, ஈழத் தமிழ் மக்கள் சரி, இந்தியாவின் தமிழ்நாட்டுத் தமிழ் மக்கள் சரி, இந்த விடயங்களில் எந்தவித குழப்பங்களும் அடையக்கூடாது. மகிந்த அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்கு எடுபடக்கூடாது. இது குறித்து உண்மைத் தன்மையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு தமிழக மீனவர்களும் ஈழத் தமிழ் மீனவர்களும் முயற்சியெடுக்க வேண்டும். எமது விடுதலை நோக்கிய பயணத்தில் நாங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ தடைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். அவற்றில் எதற்கும் அடிபணியாமல் எமது விடுதலையை விரைவுபடுத்துவதற்கு தமிழக மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கான சுதந்திரம் கிடைக்குமாயின் அது தமிழக மக்களின் ஆசியுடன்தான் கிடைக்கும். இந்த விடயத்தில் ஈழத் தமிழ் மக்களும் தமிழக மக்களும் குழப்படையக்கூடாது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
-தாயகத்தில் இருந்து வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment